நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள டிசிஎஸ் (டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்) முதல் காலாண்டில் ரூ.7,340 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் சேவைக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிதி நிலை முடிவு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
நிறுவனத்தின் வங்கி சார்பான சேவை இக்காலாண்டில் சிறப்பாக மேம்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் செயல்பாடுகள் மூலமான வருவாய் 15.8 சதவீதம் அதிகரித்து ரூ.34,261 கோடியாக இருந்தது. கடந்த 2017-18 நிதி ஆண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.29,584 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.5,945 கோடியிலிருந்து 23.4 சதவீதம் உயர்ந்து ரூ.7,340 கோடியானது. ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.4 அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.