இந்திய தொலைதொடர்புத் துறையில் தற்போது நிலவி வரும் கடுமையான போட்டி காரணமாக வாடிக்கையளார்களை தக்க வைக்க அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் கடுமையாகப் போராடி வருகின்றன. அதிலும் ஜியோ வரவுக்குப் பின்னர் ஏர்டெல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் தங்களின் சலுகைகளை அதிகரித்துள்ளன.
இதனிடையே இந்தியாவில் பிரதானமாக செயல்பட்டு வரும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இதற்கு மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, திங்கள்கிழமை அனுமதி வழங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு ஸ்பெக்ட்ரம் விதிகளின் படி ஐடியா நிறுவனம் ரூ.2,100 கோடி வங்கி இருப்புத் தொகை ஆதாரத்தை சமர்பிக்குமாறு தொலைதொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த இணைப்பின் மூலம் மொத்தம் 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இவ்விரு நிறுவனங்கள் இணைந்து பெறவுள்ளது. மேலும் இந்த புதிய நிறுவனம் வோடஃபோன் ஐடியா லிமிடட் என்று அழைக்கப்படவுள்ளது.