போதிய விழிப்புணர்வு இன்றி எரிவாயு உருளை காப்பீடு!

ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை குறித்து மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணர்வு உள்ளது. 
போதிய விழிப்புணர்வு இன்றி எரிவாயு உருளை காப்பீடு!

ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, தனிநபர் விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை குறித்து மக்களிடையே ஓரளவுக்கு விழிப்புணர்வு உள்ளது. 
ஆனால் நாம் இருக்கும் வீடு, தொழில்புரியும் கடை, விவசாயப் பயிர்கள், கறவை மாடுகள் உள்ளிட்டவற்றையும் காப்பீடு செய்ய முடியும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. 
ஆனால், வங்கிகளில் கடன் பெற்று கட்டப்படும் வீடுகள், தொழிற்கூடங்கள், கடைகள், கறவை மாடுகள் உள்ளிட்டவற்றுக்கு வங்கிகளே காப்பீடு செய்திருக்கும். இதுகுறித்தும் எந்தளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு தெரிந்திருக்கும் என்பது தெரியவில்லை.
இதே போன்று, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கும் (சிலிண்டர்), எண்ணெய் நிறுவனங்களால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்து நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் உள்ளனர்.
அண்மைக்காலமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் தொடர்ந்து இலவச எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருவதால், வீட்டு உபயோக எரிவாயு நுகர்வோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் எரிவாயு உருளைக்கான காப்பீடு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது.
எரிவாயு உருளைகளுக்கு எண்ணெய் நிறுவனங்களால் "எல்பிஜி விபத்து பீமா பாலிசி' எடுக்கப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் தனிநபர் விபத்து இறப்பு, காயத்துக்கான மருத்துவச் செலவு, விபத்தால் வீட்டுச் சேதம் உள்ளிட்டவைகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
ஆனால், காப்பீடு குறித்து நுகர்வோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், விபத்து ஏற்பட்டாலும் கூட இழப்பீடு கோரப்படாமல், அந்தத் திட்டத்தால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் முகவர்கள் கூறியது: எரிவாயு உருளை காப்பீடுக்காக பிரீமியம் தொகை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுவது இல்லை. இந்த காப்பீடு திட்டம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருந்தும். ஆனால் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது என்றனர் அவர்கள்.
இழப்பீடு வழங்கும் முறை: விபத்து நடைபெற்றால் வாடிக்கையாளர்கள் நேரடியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் காப்பீட்டுத் தொகை கோரிக்கையைப் பதிவு செய்ய முடியாது. எனவே, விபத்து நிகழ்ந்தால் வாடிக்கையாளர்கள் உடனடியாக விநியோகஸ்தருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பிராந்திய அலுவலகத்துக்கும், பீமா விபத்து காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளிப்பர். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கான பணிகள் தொடங்கும். 
முதற்கட்டமாக காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்வார். காப்பீட்டு நிறுவனம் சேத விவரங்களை மதிப்பிட்டு, இழப்பீட்டுத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கும். சொத்து சேதம் ஏற்பட்டால் நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட கட்டடத்தில் மதிப்பீட்டாளரை கொண்டு மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கப்படும்.
இழப்பீட்டுத் தொகை: விபத்தின்போது ஏற்படும் உயிரிழப்புக்கு அதிகபட்சம் ஒருவருக்கு ரூ. 6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். மருத்துவச் செலவாக ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். பாதிக்கப்படும் ஒவ்வொரு மனிதருக்கும், உடனடி நிவாரணமாக அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். உடமை சேதாரங்களுக்கு பதிவு செய்யப்பட்ட இருப்பிடத்தில் வசிக்கும் அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை நிபந்தனைகளுக்கு உள்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: விபத்தின்போது காயங்கள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளுக்கான அசல் கட்டண ரசீதுகள், மருத்துவரின் மருந்து பரிந்துரைச் சீட்டுகள், விடுவிப்பு அட்டை, மருத்துவமனையில் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற்றது தொடர்பான அசல் ஆவணங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இறப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழ், பிரேத பரிசோதனை அறிக்கை, காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அறிக்கை உள்ளிட்ட தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். 
இதுதவிர, விபத்தின்போது வீடு, கட்டடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சேதம் ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனம் சார்பில் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் வந்து ஆய்வு செய்து, அவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில், தேவையான ஆவணங்களை கொண்டு இழப்பீடு கோர முடியும்.
விழிப்புணர்வு தேவை: எரிவாயு உருளைகளுக்கு காப்பீடு உள்ளது என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் எரிவாயு நிறுவனங்களின் முகவர்கள் தெளிவுபடுத்த முடிவதில்லை. காரணம் எரிவாயு உருளை வைத்திருப்போர் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவது போல இருக்கும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே, ஆயில் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கும் public liability policy குறித்து அரசுதான் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், இதுகுறித்து முகநூல், கட்செவி அஞ்சலில் வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு பெற நிபந்தனைகள்...

சம்பந்தப்பட்ட நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் விபத்து நடந்திருந்தால் மட்டுமே இழப்பீடு கோர முடியும். 
வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையை வணிக ரீதியாகப் பயன்படுத்தியிருக்கக்கூடாது. 
சமையல் அறை இல்லாத இடங்களில் எரிவாயு உருளையை பயன்படுத்தியிருக்கக் கூடாது.
எரிவாயு அடுப்பை எப்போதும் எரிவாயு உருளையை விட 6 இஞ்ச் அளவுக்கு உயரமாக வைத்திருக்க வேண்டும். எரிவாயு உருளையை எப்போதும் நேராகவே வைத்திருக்க வேண்டும்.
எரிவாயு அடுப்பைத் தவிர மற்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை சமையல் அறையில் வைத்திருக்கக் கூடாது.
எரிவாயு உருளை பயன்படுத்தும் இடம் ஓலை கூரை வீடாக இருக்க கூடாது.
விபத்து நடக்கும் இடத்தில் உள்ள எரிவாயு உருளை, குறிப்பிட்ட முகவரியில், பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாறாக அடுத்தவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட, வேறு முகவரியில் உள்ள எரிவாயு உருளையை அவசரத்துக்கு கடன் வாங்கி பயன்படுத்தியிருக்கக் கூடாது.
அடுப்பு, லைட்டர், டியூப் போன்ற உதிரி பாகங்கள் வாங்கும்போது ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றவையாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றிருந்தாலும், 2ஆண்டுகளுக்கு ஒருமுறை விநியோகஸ்தர்களிடம் கட்டணம் செலுத்தி, அதன் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com