வரும் காலாண்டில் ரயில்வேயின் இரண்டு பொதுத் துறை நிறுவனங்களை புதிய பங்கு வெளியீட்டில் களமிறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறியதாவது:
ரயில்வேக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய ஆர்.ஐ.டி.இ.எஸ். (ரைட்ஸ்) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை மத்திய அரசு ஜூன் 20-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.180-ரூ.185-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, இந்த பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.460 கோடி கிடைக்கும்.
இந்த நிலையில், ரைட்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு அடுத்தபடியாக, வரும் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஆர்விஎன்எல் மற்றும் ஐஆர்எஃப்சி நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆர்விஎன்எல் நிறுவனம் மத்திய அரசின் 10 சதவீத பங்குகளை அதாவது 2.08 கோடி பங்குகளை விற்பனை செய்வதற்கான அனுமதியை செபியிடமிருந்து கடந்த மாதம் பெற்றது.
ஆர்விஎன்எல் பங்கு விற்பனை மூலம் ரூ.500 கோடியும், ஐஆர்எஃப்சி பங்கு விற்பனை மூலம் ரூ.1,000 கோடியும் மத்திய அரசுக்கு கிடைக்கும் என்றார் அவர்.
ரைட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டில், மத்திய அரசு 12 சதவீத பங்குகளை அதாவது 2.52 கோடி பங்குகளை விற்பனை செய்கிறது. இதில், பணியாளர்களின் 12 லட்சம் பங்குகளும் அடங்கும். வரும் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கவுள்ள ரைட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு ஜூன் 22-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.