ஏற்றுமதி சந்தைகளில் நிராகரிப்பு: தரத்தில் கவனம் செலுத்த உணவுத் துறைக்கு அரசு அறிவுறுத்தல்
சர்வதேச நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளில் நிராகரிக்கப்படுவதை தவிர்க்க உணவுத் துறை தரத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என உணவு பதப்படுத்துதல் துறை செயலர் ஜெகதீஷ் பிரசாத் மீனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல தயாரிப்புகள் சர்வதேச ஏற்றுமதி சந்தையில் நிராகரிப்புக்கு உள்ளாகின்றன. அதிலும் குறிப்பாக, பாசுமதி அரிசி ஏற்றுமதி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தரச் சான்றிதழ் முறைகளில் இன்னும் நாம் பின்தங்கியுள்ளதையே காட்டுகிறது. பிறகு ஏன், நமது பொருள்கள் பல நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளில் நிராகரிப்பு செய்யப்படுகின்றன.
ஏற்றுமதி செய்யப்படும் பாசுமதி அரிசியில் பூச்சிக் கொல்லி எச்சங்கள் காணப்படுவதாக எழுந்துள்ள பிரச்னை கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பூதாகரமாகி வருகிறது. இதனால், இங்கிருந்து அனுப்பப்பட்ட பாசுமதி அரிசி வகைகளில் பெரும்பாலானவை சர்வதேச நாடுகளின் சந்தைகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது, இதே போன்ற பிரச்னை இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படும் தேன் உள்ளிட்ட பல பொருள்கள் மீதும் பரவியுள்ளது.
உணவுத் துறை தரக் கட்டுப்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளில் போதிய கவனம் செலுத்தாததே இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் மூலகாரணம்.
இதனை உணர்ந்து, உணவு துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தவதுடன், தரச் சான்றிதழ் விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்றதன் அடிப்படையிலான தரச் சான்றிதழ் பெறுவதில் அதிக கவனம் செலுத்தினால் தான் நமது உணவுப் பொருள்கள் ஏற்றுமதி எந்த வித சிக்கலுமின்றி சுமூகமான முறையில் அமையும் என்றார் அவர்.