ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளதாவது:
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் எதிர்மறை விளைவுகள் பல்வேறு துறைகளில் காணப்படுகின்றன. இருப்பினும், கடந்த 2017-இல் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும், அவர்களது சொத்து மதிப்பும் தலா 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதன்படி, நிகர அளவில் அதிக சொத்து மதிப்பைக் கொண்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்து 2.63 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், அவர்களது சொத்து மதிப்பும் 21 சதவீதம் வளர்ச்சி கண்டு 1 லட்சம் கோடி டாலராகியுள்ளது.
கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது சொத்து மதிப்பின் உலக சராசரி அளவான 11.2 சதவீதம் மற்றும் 12 சதவீதம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அவற்றின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக உள்ளது.
உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் சீனா முன்னிலையில் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் இந்தியா மிக வேகமான சந்தை வளர்ச்சியை பெற்றதாக கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.