பொதுத் துறையைச் சேர்ந்த ஓஎன்ஜிசி நிறுவனம் 45 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-18 நிதி ஆண்டுக்கு முதலீட்டாளர்களுக்கு இரண்டாவது முறையாக 45 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதென நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.2.25 முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். இதற்காக, நிறுவனம் ரூ.2,887 கோடியை ஒதுக்கீடு செய்யவுள்ளது. மார்ச் 14-ஆம் தேதி இடைக்கால ஈவுத்தொகையை விநியோகிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஓஎன்ஜிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஓஎன்ஜிசி நிர்வாக குழு நடப்பு நிதி ஆண்டுக்கு முதலாவது இடைக்கால ஈவுத்தொகையாக 60 சதவீதத்தை வழங்க முடிவு செய்தது. அதன்படி, ரூ.5 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.3 கடந்த நவம்பர் மாதத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.