உலக நிலவரங்கள் எதிரொலி!: சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி

உலக அளவில் வர்த்தக போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது.
உலக நிலவரங்கள் எதிரொலி!: சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி

உலக அளவில் வர்த்தக போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச் சந்தைகளில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது.
அமெரிக்காவில் உருக்கு இறக்குமதிக்கு 25 சதவீத வரியும், அலுமினிய இறக்குமதிக்கு 10 சதவீத வரியும் விதிக்க அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இந்த செய்தி உலக அளவில் உலோகத் துறை சார்ந்த பங்குகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. 
உலக அளவில் தேவை குறைந்து வருவதையடுத்து, புதிய ஆர்டர்கள் கிடைக்காததால் இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி சென்ற பிப்ரவரி மாதத்தில் ஆறுமாதங்களில் இல்லாத அளவில் சரிவடையும் என மாதாந்திர ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இருப்பினும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது வீழ்ச்சியடையும் சந்தையை ஓரளவுக்கு தூக்கி நிறுத்த உதவியது.
வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருந்தபோதிலும் பங்குச் சந்தைகளில் சரிவு தொடர்கதையாகி வருகிறது. இதைத் தவிர, இந்திய வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக, அந்நிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றன.
உருக்கு, அலுமினியம் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருவதையடுத்து , உலோகத் துறை பங்குகளின் விலை 3.30 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக, என்எம்டிசி நிறுவனப் பங்கின் விலை 5.85 சதவீதம் வீழ்ச்சி கண்டது. அதைத் தொடர்ந்து, நேஷனல் அலுமினியம் 4.98 சதவீதமும், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 4.68 சதவீதமும், டாடா ஸ்டீல் 2.95 சதவீதமும், வேதாந்தா 2.51 சதவீதமும், ஹிந்துஸ்தான் ஸிங்க் பங்கின் விலை 0.71 சதவீதமும் குறைந்தன. 
எண்ணெய்-எரிவாயு, மோட்டார் வாகனம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பொறியியல் சாதனங்கள், உள்கட்டமைப்பு, மின்சாரம், ரியல் எஸ்டேட், மருந்து, வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலையும் 1.81 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள் துறை பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 5.04 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 2.73 சதவீதமும் குறைந்தன. 
இவைதவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.48 சதவீதமும், கோல் இந்தியா 2.33 சதவீதமும், ஓஎன்ஜிசி 2.14 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 2.05 சதவீதமும், யெஸ் வங்கி 1.95 சதவீதமும், ஹெச்யுஎல் 1.90 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.30 சதவீதமும், ஐடிசி 1.27 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட்ஸ் 1.26 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி 1.25 சதவீதமும் சரிந்தன.
இருப்பினும் முதலீட்டாளர்களின் வரவேற்பை பெற்ற காரணத்தால், ஸன் பார்மா பங்கின் விலை 2.50 சதவீதமும், டிசிஎஸ் 2.21 சதவீதமும், மஹிந்திரா 0.81 சதவீதமும், எஸ்பிஐ 0.48 சதவீதமும் அதிகரித்தன.
மோசடி புகாரில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் பங்கின் விலை நேற்றைய வர்த்தகத்தில் மேலும் 5 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து 13 வர்த்தக தினங்களாக இறக்கத்தை சந்தித்து வரும் இந்நிறுவனப் பங்கின் விலை பிப்ரவரி 14 முதல் 70 சதவீதம் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 33,746 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 99 புள்ளிகள் சரிந்து 10,358 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com