நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வாராக் கடன் அளவு சென்ற 2017 டிசம்பர் நிலவரப்படி ரூ.8,40,958 கோடியாக இருந்தது என மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பொது மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் வாராக் கடன் சென்ற டிசம்பரில் ரூ.8,40,958 கோடியாக இருந்தது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன் தொகையில் தொழிற்துறையின் பங்களிப்பு மட்டும் ரூ.6,09,222 கோடி அளவுக்கு உள்ளது.
இதைத் தவிர, வங்கிகளுக்கு சேவைத் துறையின் வாராக் கடன் ரூ.1,10,520 கோடியாகவும், வேளாண் மற்றும் அதுசார்ந்த துறைகளின் வாராக் கடன் ரூ.69,600 கோடியாகவும், உணவு சாரா துறை வாராக் கடன் ரூ.14,986 கோடியாகவும், சில்லறை கடன் பிரிவில் வாராக் கடன் ரூ.36,630 கோடியாகவும் உள்ளது.
வாராக் கடன் அதிகம் உள்ள பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி முதலிடத்தில் உள்ளது. இவ்வங்கியின் வாராக் கடன் மட்டும் ரூ.2,01,560 கோடி அளவுக்கு உள்ளது. இதைத் தவிர, பஞ்சாப் நேஷனல் வங்கி வாராக் கடன் ரூ.55,200 கோடி; ஐடிபிஐ வங்கி ரூ. 44,542; பேங்க் ஆஃப் இந்தியா ரூ.43,474, பேங்க் ஆஃப் பரோடா ரூ.41,649 கோடி; யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.38,047 கோடி; கனரா வங்கி ரூ.37,794 கோடி; ஐசிஐசிஐ வங்கி வாராக் கடன் ரூ.33,794 கோடியாக இருந்தது.
மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ரூ.31,724 கோடி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (ரூ.32,491 கோடி), யூகோ பேங்க் (ரூ.24,308 கோடி), அலகாபாத் வங்கி (ரூ.23,120 கோடி), ஆந்திரா வங்கி (ரூ.21,599 கோடி), கார்ப்பரேஷன் வங்கி (ரூ.21,818 கோடி) ஆகியவற்றின் வராக் கடனும் கணிசமான அளவில் இருப்பதாக சுக்லா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.