கார்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வால்வோ கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சார்லஸ் ஃப்ரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு கணிசமான அளவில் உயர்த்தியுள்ளது. இதனை, செலவினை ஈடுகட்டும் வகையில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. அதன்படி, அனைத்து விதமான கார்களின் விலையையும் 5 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். சுங்க துறையின் மூலம் இனி விடுவிக்கப்படும் வாகனங்கள் அனைத்தின் மீதும் புதிய விலை உயர்வு அமல்படுத்தப்படும்.
வாகன இறக்குமதிக்கான வரி உயர்த்தப்பட்டது மோட்டார் வாகன துறையில் குறுகிய கால விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றார் அவர்.