பொதுத் துறையைச் சேர்ந்த மஹாரத்னா அந்தஸ்து பெற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.4,230 கோடியை திரட்ட உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 20.20 சதவீதத்தை மத்திய அரசு விலக்கி கொள்ளவுள்ளது. இந்த புதிய பங்கு வெளியீட்டில் 3,41,07,525 பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நிறுவனம் ரூ.4,230 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை ரூ.1,215-ஆகவும், அதிகபட்ச விலை ரூ.1,240 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய பங்கு வெளியீடு வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) தொடங்கி செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 20) முடிவடையும். பங்கு விலக்கல் நடைமுறைகளின் மூலம் மத்திய அரசு ரூ.75,000 கோடி திரட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய பங்கு வெளியீடு நடைபெறவுள்ளது என ஹெச்ஏஎல் கூறியுள்ளது.