சிஎன்ஜி, ஹைப்ரீட் போன்ற மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களைக் கொண்ட கார்களை உருவாக்குவதில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் முழு வீச்சில் ஈடுபடவிருக்கிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கூறியதாவது: இந்தியாவில் காற்றை மாசுபடுத்தாத கார்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதன் மூலம், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் மத்திய அரசைப் போலவே மாருதி சுஸுகி நிறுவனமும் விரும்புகிறது.
அதற்காக, மின்சார பேட்டரிகளால் இயங்கும் கார்களை மட்டுமே நம்பியிராமல் சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் கார்கள், பேட்டரி மற்றும் எரிபொருளில் மாறி மாறி இயங்கக் கூடிய ஹைப்ரீட் ரகங்கள் உள்ளிட்ட மாற்றுத் தொழில்நுட்பங்களைக் கொண்ட அனைத்து விதமான வாகனங்களையும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.