பொதுத் துறையைச் சேர்ந்த என்டிபிசி நிறுவனத்தின் பங்குகளை வரும் டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்ததாவது: ஓஎஃப்எஸ் முறையில் என்டிபிசி நிறுவனத்தின் பங்குகளை வரும் டிசம்பர் மாதம் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, முதலீட்டாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து பங்குகள் ஒதுக்கீடு குறித்து இறுதி செய்யப்படும். என்டிபிசி பங்கு வெளியீடு குறித்து விழிப்புணர்வு பிரசாரங்களை ஏற்கெனவே வணிக வங்கிகள் மேற்கொண்டுள்ளன என்றார் அவர்.
என்டிபிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான 10 சதவீத பங்குகளை விற்று நிதி திரட்ட அமைச்சரவை குழு ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 6.75 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
தற்போதைய விலை நிலவரத்தின் அடிப்படையில் எஞ்சிய 3.25 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் நிலையில் மத்திய அரசுக்கு ரூ.3,800 கோடி கிடைக்கும்.