தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ வங்கி, சில்லறை கடனுதவியை அதிகரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் செயல் இயக்குநர் அனுப் பக்ஷி கூறியது:
ஐசிஐசிஐ வங்கிக்கு தமிழகத்தில் வலுவான அடிப்படை கட்டமைப்புகள் உள்ளன. இதனை பயன்படுத்தி, நடப்பு நிதியாண்டில் சில்லறை கடனுதவியை (ரீடெயில் லோன்) 40 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் நுகர்வோர், விவசாயம், வீட்டு வசதி ஆகியவற்றுக்கு வழங்கப்படும் கடன் ரூ.13,000 கோடியாக உயரும். நடப்பாண்டில் நுகர்வோர் கடன்கள் 50 சதவீதம் வளர்ச்சியைக் கண்டு ரூ.5,000 கோடியை எட்டும். வீட்டுக் கடனுதவியை 40 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் இவ்வகை கடன் நடப்பு நிதியாண்டில் ரூ.3,700 கோடியாக அதிகரிக்கும்.
அதேபோன்று, வேளாண் தொடர்புடைய கடனுதவிகளை 30 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் அவ்வகை கடன் ரூ.4,300 கோடியைத் தொடும் என்றார் அவர்.