தனியார் துறையைச் சேர்ந்த கர்நாடகா வங்கி இரண்டாவது காலாண்டில் ரூ.111.86 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்தாண்டின் இதே கால அளவில் ஈட்டிய நிகர லாபம் ரூ.93.38 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும். ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,565.75 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,653.81 கோடியாக இருந்தது. குறிப்பாக வட்டி மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.1,317.93 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,452.61 கோடியாக காணப்பட்டது.
மதிப்பீட்டு காலாண்டில் வாராக் கடன் இடர்பாடுகளை எதிர்கொள்ள ரூ.193.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முந்தைய ஆண்டில் இந்த ஒதுக்கீடு ரூ.225.98 கோடியாக இருந்தது.
நிகர அளவிலான வாராக் கடன் 3.04 சதவீதத்திலிருந்து குறைந்து 3 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், மொத்த வாராக் கடன் விகிதம் 4.13 சதவீதத்திலிருந்து 4.66 சதவீதமாக உயர்ந்துள்ளது என கர்நாடகா வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.