மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடனேயே முடிவடைந்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 26 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவில் 71-ஆக குறைந்தது. இது பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சர்வதேச நிலவரங்களைப் பொருத்தவரையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது மேலும் புதிய வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பங்கு வர்த்தகத்தில் பாதிப்பை உண்டாக்கியது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் குறைந்து 38,645 புள்ளிகளில் நிலைத்தது. அதேசமயம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 3 புள்ளிகள் உயர்ந்து 11,680 புள்ளிகளில் நிலைத்தது.