ரிசர்வ் வங்கி கடந்த நிதியாண்டில் 8.46 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து அவ்வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 8.46 டன் தங்கத்தை கொள்முதல் செய்துள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நவம்பரில் தான் ரிசர்வ் வங்கி தங்கத்தை கொள்முதல் செய்திருந்தது. அப்போது, சர்வதேச நிதியத்திடமிருந்து 200 டன் தங்கம் வாங்கப்பட்டது.
கடந்த 2017 ஜூன் நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் வசம் தங்கத்தின் கையிருப்பு 557.77 டன்னாக இருந்தது. தற்போது, 8.46 டன் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டதையடுத்து, நடப்பாண்டு ஜூன் நிலவரப்படி தங்கத்தின் கையிருப்பு 566.23 டன்னாக உயர்ந்துள்ளது. மொத்த தங்க கையிருப்பில், 292.30 டன் நோட்டுகளுக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 273.93 டன் தங்கம் ரிசர்வ் வங்கியின் சொத்தாக கருதப்படுகிறது.
கடந்தாண்டு ஜூன் 30 நிலவரப்படி ரூ.62,702 கோடியாக இருந்த தங்கத்தின் மதிப்பு நடப்பாண்டு இதே கால அளவில் 11.12 சதவீதம் அதிகரித்து ரூ.69,674 கோடியை எட்டியுள்ளது என ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.