இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை ஸ்திரத் தன்மை அடைய இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்க வேண்டுமெனில் அதன் விலை மிகவும் குறைய வேண்டும். பேட்டரியின் விலை குறையும் பொழுது மின்சார கார்களுக்கான விலையும் குறையும்.
இதற்கு நல்ல முன்னோட்டமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பேட்டரியின் விலை குறையத் தொடங்கி விட்டது. ஏற்கெனவே அதன் விலை 20-25 சதவீதம் குறைந்து விட்டது.
இந்த நிலையில், பேட்டரி விலை மேலும் 20-25 சதவீதம் குறைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அப்போது மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் மத்திய அரசின் ஃபேம் திட்டங்களுக்கான தேவையும் இருக்காது. அந்த நிலை ஏற்பட இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும். எனவே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகே மின்சார வாகன பிரிவின் விற்பனையானது ஸ்திரத் தன்மையை அடையும் என்றார் அவர்.