சிறப்பு பொருளாதார மண்டலங்களில் (எஸ்.இ.இசட்) திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என 13 நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் ஆலைகளை அமைக்க, ஜி.பி. ரியல் எஸ்டேட், ஜேபிஎஃப் பெட்ரோ கெமிக்கல், அரபிந்தோ பார்மா உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி காலவாதியாக உள்ள நிலையில், அந்த 13 நிறுவனங்களும் தற்போது கூடுதல் அவகாசம் கோரி மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதையடுத்து, புதன்கிழமை (செப்.12) வர்த்தக செயலர் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான ஒப்புதல் குழு 13 நிறுவனங்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்.
குருகிராமத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜி.பி. ரியல் எஸ்டேட் எலக்ட்ரானிக் வன்பொருள் ஆலை அமைக்க அனுமதி பெற்றது. ஆனால், ஆலை அமைப்பதற்கான காலக்கெடு பல்வேறு கட்டங்களில் நீடிக்கப்பட்டு நடப்பாண்டு நவம்பர் 13-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.அந்த நிறுவனம் தற்போது, அடுத்தாண்டு நவம்பர் 13-ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியுள்ளது.
அதேபோன்று மங்களூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜேபிஎஃப் பெட்ரோகெமிக்கல் ஆலை அமைக்க பெற்ற அனுமதி நடப்பாண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்க அந்த நிறுவனம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
அதேபோன்று அரபிந்தோ பார்மா நிறுவனத்தின்அனுமதி அடுத்தாண்டு ஜூலையுடன் நிறைவடையவுள்ள நிலையில் அந்த நிறுவனம் கால நீட்டிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.