கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகள் கொண்ட பஞ்சு அருணாசலம் (75) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். ஏற்கெனவே இருதயக் கோளாறு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பஞ்சு அருணாசலத்தின் உயிர் செவ்வாய்க்கிழமை முற்பகலில் தூக்கத்திலேயே பிரிந்தது.
பஞ்சு அருணாசலத்தின் உடல் தியாகராய நகர் பாகீரதி அம்மாள் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, சுந்தர்.சி, நடிகர்கள் சிவகுமார், சூர்யா, நடிகை குஷ்பூ உள்ளிட்ட திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த பஞ்சு அருணாசலத்துக்கு மனைவி மீனா, மகன்கள் சண்முகம், சுப்பிரமணியம் (நடிகர் சுப்பு), மகள்கள் கீதா, சித்ரா உள்ளனர்.
பஞ்சு அருணாசலத்தின் மகள் மற்றும் மகன் இருவரும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்கள் இருவரும் சென்னை திரும்பியதும் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதுவரை அவரது உடல் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
பஞ்சு அருணாசலத்தின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. இறுதி ஊர்வலம் அவருடைய தியாகராய நகர் இல்லத்திலிருந்து தொடங்கியது. தியாகராய நகரிலிருந்து கண்ணம்மாபேட்டை இடுகாடு வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இளையராஜா, கங்கை அமரன், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரையுலகினர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்கள்.