மலையாள திரையுலகில் நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர் அந்த நடிகை. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு திரும்பும் போது, அவரது காரை ஒரு கும்பல் வழி மறித்தது.
மேலும், அவரது காரில் ஏறிக்கொண்ட அந்த மர்ம நபர்கள், அந்த நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் போலீஸில் புகார் செய்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், நடிகையின் முன்னாள் கார் டிரைவர் சுனில் பல்சர் மற்றும் கூலிப்படையினர் 5 பேரை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாயின. ஆனால், நடிகர் திலீப் இதை முற்றிலும் மறுத்தார். இதைத்தொடர்ந்து நடிகர் திலீப்புக்கு காக்கநாடு சப்-ஜெயிலில் இருந்து பல்சர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் வெளியானது.
இதனால் இந்த வழக்கு விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் திலீப் இந்த வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கேரள சினிமாத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.