மதுரை தனக்கன்குளத்தைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி வையம்மாள் (32). மதுரை முத்து, தனியார் தொலைக்காட்சி நடத்திய அசத்தப் போவது யாரு, சன்டே கலாட்டா ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்றவர். இவர் திரைப்பட நடிகரும் ஆவார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை முத்து வெளிநாடு சென்றபோது, வையம்மாள் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு செல்ல வீட்டிலிருந்து காரில் புறப்பட்டார். காரை கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றார். திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதியில் வந்தபோது, வலது புற சக்கரம் பழுதானதால் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் கார் மோதியது. இதில், வையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் மதுரை முத்து, மறைந்த வையம்மாளின் தோழியும் பல் மருத்துவருமான நீத்தியை ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று வெளியானபோது, அது போட்டோஷூட்டுக்காக எடுக்கப்பட்டது என்று மறுப்பு வெளிவந்தது. ஆனால் தற்போது இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை முத்து ஒரு பேட்டியில் கூறியதாவது: என் பெற்றோர் வயதானவர்கள். கூடவே 2 குழந்தைகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும். அதனால் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தேன். என் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக இந்த முடிவை என் வீட்டில் எடுத்தார்கள். அனைவரின் சம்மதத்துடனும் என் மனைவியின் தோழியும் மதுரையில் பல் மருத்துவராகவும் இருக்கும் நீத்தியை நான் திருமணம் செய்துகொண்டுள்ளேன். என் இரு குழந்தைகளுக்கும் அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.