இதுவரை ஒரு நடிகராக முத்திரை பதித்துவரும் தனுஷ், பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கிவருகிறார்.
ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை - ஷான் ரோல்டன். பவர் பாண்டி ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார் தனுஷ்.
படத்தைப் பாராட்டி முதலில் ட்வீட் செய்துள்ளார் தனுஷின் சகோதரரும் இயக்குநருமான செல்வராகவன். கிட்டத்தட்ட முழுப் படத்தையும் பார்த்துவிட்டேன். இந்தப் படத்தை நீங்கள் விரும்புவீர்கள் என்று என்னால் உத்தரவாதமாகக் கூறமுடியும். மிகவும் சக்திமிக்கதாக உள்ளது என்று செல்வராகவன் ட்வீட் செய்ய, இதற்கு நன்றி தெரிவித்தார் தனுஷ்.
பவர் பாண்டி படத்தில் கெளரவ வேடத்தில் இயக்குநர் கெளதம் மேனன் நடித்துள்ளார். அவரும் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஏப்ரல் 14-ல் படம் வெளிவருகிறது. அந்தச் சமயத்தில் எந்தப் படம் வெளிவந்தாலும் அதுபற்றி யோசிக்கவில்லை என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்குப் பதில் அளித்த தனுஷ், சூப்பர் கெளரவ வேடத்தில் நடித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார். இதுதவிர திரையுலகினர் பலரும் தனுஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.