சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (டிச.5) இரவு 11.30 மணிக்கு மறைந்தார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு வரை அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தில்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவர்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனை புரிந்த உயர்ந்த தலைவர் அவர். அவர் மீண்டும் ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என்று நாம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் பிரிவால் வாடும் எனக்கும் தமிழக மக்களுக்கும் இந்தப் பிரிவைத் தாங்கும் வல்லமையைத் தர இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.