ஜெயம்ரவி நடித்துவரும் போகன் படத்தின் கதையை தன்னிடமிருந்து திருடிவிட்டதாக அந்தோனி தாமஸ் என்கிறவர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போகன் இயக்குநர் லஷ்மணன், காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
அந்தோனி தாமஸ் என்மீது பொய்யான புகாரை கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, இருவர் கதையும் அவரவர் பாணியில் எழுதப்பட்டுள்ளது என்று முடிவு செய்தார்கள். இதன்பிறகு அந்தோனி தாமஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இதன்பிறகு கோயம்பேடு காவல் நிலையத்தில் என்மீது பொய்யான புகார் அளித்தார். நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளதால் சட்டப்படி எதிர்கொள்ளுமாறு அங்குக் கூறினார்கள். ஆனால் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பொய்யான புகார்கள் கூறி அந்தோனி தாமஸ் மன உளைச்சல் ஏற்படுத்துகிறார். எனவே அந்தோனி தாமஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.