இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’திரைப்படம் 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது என்பது பழைய செய்தி. திங்களன்று மும்பையில் நடைபெற்ற JIO MAMI 18 வது மும்பைத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்த புது செய்தி என்ன தெரியுமா? பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் நடிப்பதற்கு பணமே பெற்றுக் கொள்ளவில்லை என்பது தான். திரைப்படக் கலையின் மீது தீராக்காதல் கொண்ட ஒரு மகத்தான இயக்குநரும், மகா நடிகரும் இணைந்தால் இப்படிப்பட்ட ஆச்சர்யங்கள் நிகழ்வது சாத்தியமே!
எய்ட்ஸ் இருக்கிறதா? இல்லையா எனப் பரிசோதனை செய்து கொள்ள வரும் எட்டு கதாபாத்திரங்களிடையே மருத்துவமனையின் பேத்தாலஜி வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழும் சம்பவங்களின் தொகுப்பே “சில சமயங்களில்” திரைப்படத்தின் கதை. எய்ட்ஸ் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்ட இம்மாதிரியான ஒரு கதையை வைத்து எளிதாக ஒரு டாக்குமெண்டரி படமெடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான பார்வையாளர்கள் மிகவும் குறைவு. இந்தப் படம் அடைய வேண்டிய இலக்கு பெரியது என்பதால் தான் இதை நகைச்சுவையும், சுவாரஸ்யமும் கலந்து வெகு ஜன ரசனையில் படமாக்கி இருப்பதாக இயக்குநர் பிரியதர்ஷன் தெரிவித்திருக்கிறார்.