கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் வாக்குகளின் அடிப்படையில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த ஆனந்துக்கு ரூ. 75 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
அடுத்தச் சிலநாள்களில், ஆனந்தின் தேர்வு குறித்து இணையத்தில் சர்ச்சை உருவாகியது. ஆனந்த் ஏற்கெனவே சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை, போன்ற 10 தமிழ்ப் படங்களில் பாடியுள்ளவர் என்கிற தகவல் வெளியானது. இதனையடுத்து, ஏற்கெனவே பின்னணிப் பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வியைப் பலரும் சமூகவலைத்தளங்களில் எழுப்பினார்கள். இந்தச் சர்ச்சை குறித்து விஜய் டிவியின் தலைமை நிர்வாகி பிரதீப் மில்ராய் பீட்டர், எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்தோ பாடகராக உள்ளவரோ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்று எழுதப்படவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் அரவிந்தாக்ஷன், நடிகராக அறிமுகம் ஆகவுள்ளார். சரவணன் மீனாட்சியில் நடித்துவரும் ரச்சிதாவுடன் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். விரைவில் தகவல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் அவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க உள்ளார் என்று அறியப்படுகிறது.