இன்று திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்த் திரையுலகுக்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவிரவும் ஜோக்கர் சிறந்த தமிழ்ப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இருவருக்கு இன்றைய அறிவிப்புகள் ஏமாற்றத்தை அளித்துள்ளன.
தர்மதுரை படத்துக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்குத் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டிப்பட்டி கணவா காத்து, மக்க கலங்குதப்பா போன்ற பாடல்கள் ரசிகர்கள் மனத்தை கொள்ளை கொண்டன. ஆனால் சிறந்த இசையமைப்பாளர் விருது Allama என்கிற கன்னடப் படத்துக்காக பாபு பத்மனாபாவுக்குக் கிடைத்துள்ளது.
அதேபோல சிறந்த நடிகருக்கான விருதை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தட்டிச் சென்றுள்ளார். மோகன்லாலுக்குச் சிறப்பு விருது கிடைத்துள்ளது. இறைவி, தர்மதுரை படங்களுக்காக விஜய் சேதுபதிக்குத் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.