64-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர். அதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக மராத்தியில் வெளியான 'காசவ்' தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக அக்ஷய் குமாரும் ('ருஸ்தம்' - ஹிந்திப் படம்), சிறந்த நடிகையாக சுரபி லட்சுமியும் ('மின்னாமினுங்கு' - மலையாளப்படம்) அறிவிக்கப்பட்டுள்ளனர். தேசிய விருதை அக்ஷய் குமார் பெறுவது இதுவே முதன்முறையாகும். சிறந்த இயக்குநருக்கான விருது மராத்தி இயக்குநர் ராஜேஷ் மாபுஷ்கருக்கு கிடைத்துள்ளது. 'வெண்டிலேட்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவர் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளார். பிராந்திய மொழிப்படங்களைப் பொருத்தவரை தமிழில் 'ஜோக்கர்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்துள்ளது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று பேரும் இவ்விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். சிறந்த பின்னணிப் பாடகர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'ஜோக்கர்' படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின்' பாடலைப் பாடியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்துள்ளது.
இந்நிலையில் தேசிய விருதுக்கான தேர்வுகளைப் பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விமரிசனம் செய்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: தேசிய விருது அறிவிப்பில் நடுவர்களின் செல்வாக்கையும் பாரபட்சத்தையும் என்னால் என்னால் தெளிவாகக் காணமுடிகிறது. இந்த விருது அறிவிப்புகள் ஒருதலைபட்சமானது என்று விமரிசனம் செய்துள்ளார்.