தமிழ்ப் புத்தாண்டன்று தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துள்ள பவர் பாண்டி, ஆர்யா நடித்துள்ள கடம்பன், லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா ஆகிய படங்கள் வெளியாகின.
வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள பவர் பாண்டி படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு. இப்படத்தின் கதைக்களம், அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் ஒருவரைப் பற்றிய கதையாகும். ஆர்யா, கேத்ரீன் தெரசா நடிப்பில் ராகவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம், கடம்பன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள சிவலிங்கா படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் லாரன்ஸ். பி. வாசு இயக்கியுள்ள இப்படத்தில் ரித்திகா சிங், சக்தி வாசு போன்றோரும் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் இந்த மூன்று படங்களில் சிவலிங்கா சென்னையில் அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாள்களில் இதன் வசூல் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை கிடைத்துள்ளதாக அறியப்படுகின்றன. ப.பாண்டி, கடம்பன் ஆகிய படங்களும் கிட்டத்தட்ட தலா ரூ. 50 லட்சங்களைப் பெற்றுள்ளன. வசூலில் ப. பாண்டி-க்கு இரண்டாம் இடம்.
பாகுபலி 2, ஏப்ரல் 28 அன்று வெளிவருவதால் இந்த மூன்று படங்களும் இரு வாரங்கள் போட்டியின்றி வசூலை அள்ள நல்ல வாய்ப்பு உள்ளது.
இதனிடையே தமிழ்ப் புத்தாண்டுச் சமயத்தில் வெளியான ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்8 என்கிற ஆங்கிலப் படம் தமிழ்நாட்டில் இந்த மூன்று படங்களை விடவும் அதிக வசூலைப் பெற்றுள்ளது. மற்ற 3 படங்களை விடவும் அதிகக் காட்சிகள் அதற்குக் கிடைத்தது ஒரு முக்கிய காரணம். இந்தப் படம் இந்தியா முழுக்க முதல் 5 நாள்களில் ரூ. 70 கோடி வரை வசூலாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.