பாகுபலி-2 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. இதனால் ஏப்ரல் 28 அன்று எவ்விதத் தடையுமில்லாமல் படம் வெளியாகிறது.
மெகா பட்ஜெட்டில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் பாகுபலி 2ம் பாகம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடத் தடை கோரி, ஏசிஇ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்தப் படத்தில் தமிழக விநியோக உரிமையைப் பெற்றுள்ள ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவன உரிமையாளர் சரவணன், தங்கள் நிறுவனத்திடம் ரூ. 1.18 கோடி கடன் பெற்றார். அப்போது, இந்தத் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக, கடன் தொகையுடன் கூடுதலாக ரூ. 10 லட்சம் சேர்த்து திருப்பித் தருவதாக கூறியிருந்தார். ஆனால், கூறியபடி இதுவரை பணத்தைத் தரவில்லை. எனவே, கடன் தொகை முழுவதும் அவர் திருப்பித் தரும் வரை, பாகுபலி-2 படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு மீது பதிலளிக்குமாறு பட விநியோகஸ்தருக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பும் சமாதானம் ஆயின. ஏசிஇ நிறுவனத்துக்கு ரூ. 1.28 கோடி பணத்தைத் திருப்பித்தந்தது ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன். இதனால் இவ்வழக்கை முடித்துவைத்தது உயர் நீதிமன்றம். இதையடுத்து ஏப்ரல் 28 அன்று எவ்விதத் தடையுமில்லாமல் படம் வெளியாகிறது.