விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் தமிழகத் திரையரங்குகளில் படக்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி பிரச்னையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள், அரசிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், பலரும் தற்கொலை முடிவை நாடி வருவது வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும். அதை வலியுறுத்தி வருகிற 25-ம் தேதி அனைத்து கட்சிகள் நடத்தும் நாடு தழுவிய அடையாளப் போராட்டத்துக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்றைய தினம் தமிழகத்தில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை, மாலை காட்சிகள் ரத்தாகியுள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இத்தகவலை அறிவித்துள்ளது.