பாகுபலி 2 படத்தை நாளை வெளியிட தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பாகுபலி- 2 படத்தின் திரையிடும் உரிமையை முடக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனு விவரம்: 'கே' புரொடக்ஷன் நிறுவன உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன், என்னிடம் கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.1.11 கோடியைக் கடனாகப் பெற்றார். இந்தக் கடனை அவர் திருப்பிச் செலுத்தமுடியவில்லை. அவருக்குக் கொடுத்த கடன் தொகை வட்டியுடன் ரூ.1.48 கோடி.
இந்நிலையில், பாகுபலி -2 என்ற திரைப்படத்தின் உரிமைகளை அவர் பெற்றுள்ளார். இந்த உரிமைகளைப் பெற போதியளவில் நிதி உதவி அளித்துள்ளேன். என்னிடம் பெற்ற கடன் தொகையைக் கேட்டபோது, எனக்கு வங்கிக் காசோலை வழங்கினார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவரது வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்குத் தர வேண்டிய தொகைக்கு சொத்து உத்தரவாதம் வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல், தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிடக்கூடாது. மேலும் படம் வெளியிடுவதை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகுபலி 2 படம் நாளை வெளிவர எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.