ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (பெப்சி) தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெப்சி அமைப்பு என்பது திரைப்பட உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் அமைப்பாகும். இதில், சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். வேலை நிறுத்தத்தால் ரஜினி நடிக்கும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல் உள்ளிட்ட 35 படங்களின் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ளன. தொழிலாளர் நலத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முதலமைச்சரைச் சந்திக்கவும் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது:
படப்பிடிப்புகள் முடங்கியதற்குக் காரணம் தொழிலாளர்கள் இல்லை. தயாரிப்பாளர்கள்தான். பேச்சுவார்த்தைக்கு வர தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. படப்பிடிப்பு தடைக்குக் காரணம் பெப்சி இல்லை. எந்தவொரு பிரச்னையும் பேசி சரி செய்யலாம்.
சம்பள பிரச்னை விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம்தான் முடிவெடுக்கவேண்டும். பெப்சி தொழிலாளர்களைப் பயன்படுத்தமாட்டோம் எனத் தயாரிப்பாளர்கள்தான் சொன்னார்கள்.
பிரகாஷ் ராஜுக்குச் சங்கவிதிகள் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. படங்கள் தயாரித்தாலும் அடிப்படையில் அவர் நடிகர் தான். ஒப்பந்தம் ரத்தே பிரச்னைக்குக் காரணம். ஏற்கெனவே எடுக்கப்பட்ட படப்பிடிப்புக் காட்சிகளைக் காண்பித்து இன்று படப்பிடிப்பு நடைபெறுவதாக விஷால் கூறுகிறார். பிரச்னை குறித்து தேவைப்பட்டால் தமிழக அரசிடம் முறையிடப்படும் என்றார்.