கலைஞர்கள் உள்பட அனைவரும் காலத்தை உயிராய் கருதி வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
தி மெட்ராஸ் "ஃ"பிலிம் சொசைட்டி சார்பில், திரைத் துறை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா (நல்லி "ஃ"பிலிம் விருது }2016) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை சச்சு, தி மெட்ராஸ் "ஃ"பிலிம் சொசைட்டி தலைவர் நல்லி குப்புசாமி, ஜெர்மன் கலாசார மைய இயக்குநர் ஹெல்மட் ஷிப்பெர்ட், ஜப்பான் துணைத் தூதரக ஆலோசகர் மெகுமி ஷிமாதா, ஜாம்பியா துணைத் தூதரக அதிகாரி சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகை சச்சு ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருதும், சிறந்த இயக்குநர் விருது சீனு ராமசாமிக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படம் } தர்மதுரை (ஆர்.கே. சுரேஷ்) சிறந்த நடிகர் } பிரஜன் ( பழைய வண்ணாரப்பேட்டை), சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் (தர்மதுரை), சிறந்த பாடகர், பாடலாசிரியருக்கான விருது - அருள்ராஜ் (நெருப்புடா}கபாலி), சிறந்த பாடகி - மநாசி, சிறந்த புதுமுகம் } குரு சோமசுந்தரம் (ஜோக்கர்) ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, "முதலாம் ஆண்டுக்கான "எம்எஃப்எஸ் நல்லி விருதை' வாழ்நாள் சாதனைக்காக பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கலைத் துறையின் மூலம் மனிதநேயத்தை ஏற்படுத்த முடியும். காலம் பொன் போன்றது என்பதைவிட உயிர் போன்றது. எனவே, கலைஞர்கள் உள்பட அனைவரும் காலத்தை உயிரென கருதி கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி சரித்திரம் படைக்கவேண்டும்' என்றார் அவர்.