தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது. இதையொட்டி இப்படம் குறித்த விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. விளம்பர வாசகங்கள் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் ராம் கூறியதாவது:
நான் அடுக்ககத்தில் வசிக்கிறேன். அங்குக் கண்ட சம்பவங்களைக் கொண்டு தரமணி படத்தை உருவாக்கியுள்ளேன். இன்றைய இளைஞர்களிடைய நிலவும் கலாசாரம், அவர்களுடைய மனநிலை, அவர்களின் உறவு என பல அம்சங்கள் படத்தில் உள்ளன.
உலகமயமாக்கலினால் இன்றைய தமிழ்ப் பெண்களுக்கு நிறைய சுதந்தரம் கிடைத்துள்ளது. இதனால் நம் ஆண்கள் தங்களுடைய துணையைப் புரிந்துகொள்வதில் நவீனம் மற்றும் பழமையான சிந்தனைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளார்கள். தரமணி படம் தகவல் கணிப்பொறித் துறையில் பணிபுரிபவர்களைப் பற்றிய படம் மட்டுமல்ல. பன்முகக் கலாசாரம், பன்முக வாழ்க்கை கொண்ட இளைஞர்களைப் பற்றிய படம். ஒவ்வொரு இளைஞனின் வாழ்க்கையையும் தரமணி பிரதிபலிக்கும் என்றார்.
தரமணி படம் வந்தபிறகு ஆண்டிரியாவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இதுபோன்ற நடிப்புத்திறமையை நான் பார்த்ததில்லை என்றார்.