செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் வெளியீடு குறித்து தொடர்ந்து குழப்பங்கள் நீடிக்கின்றன.
இதுகுறித்து ட்விட்டரில் இயக்குநர் செல்வராகவன் கூறியதாவது:
நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் வெளியீடு குறித்த உங்கள் விசாரிப்புகளால் நெகிழ்ந்து போயிருக்கிறேன். விரைவில் படம் வெளிவரும்.
படம் வெளிவரும் நாள் இயக்குநரின் கையில் இல்லை. தயாரிப்பாளர் தான் படத்துக்குச் சொந்தக்காரர். தயாரிப்பாளர் மதனுக்கு எப்போது படத்தை வெளியிடவேண்டும் என்று தெரியும். உங்களுடைய பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. மேலும் இந்தப் படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா அளித்துள்ள பின்னணி இசையை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மிகச்சிறப்பாக செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. முதலில் ஏ சான்றிதழ் தான் கிடைத்தது. ஆனால் இதை எதிர்த்து மறு தணிக்கைக்கு அனுப்பினார்கள். அதில் யு/ஏ கிடைத்தது.
அடுத்தப் படமாக சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன்.