அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் - டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha). தூய்மை இந்தியா திட்டத்துக்கான என்னுடைய சிறிய பங்களிப்பு என்று இப்படம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் அக்ஷய் குமார்.
தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று படத்தின் டிரெய்லரைப் பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். இதனால் இந்தப் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது.
இப்படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் ரூ. 51 கோடி வசூலித்தது, டாய்லெட் ஏக் பிரேம் கதா. இந்நிலையில், இந்தப் படம் வெளியான முதல் 8 நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டியுள்ளது. ரூ. 100 கோடி வசூலைப் பெறும் அக்ஷய் குமாரின் 8-வது படம் இது. பாலிவுட் கதாநாயகர்களில் அதிகமான ரூ. 100 கோடி வசூலைக் கண்டவர், சல்மான் கான். 11 முறை. இந்த வெற்றியின் மூலம் 2-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் அக்ஷய் குமார்.
ரூ. 18 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 8 நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது.
முதல் 8 நாள்களின் வசூல்
1-ம் நாள் (வெள்ளிக்கிழமை) - ரூ. 13.10 கோடி
2-ம் நாள் (சனிக்கிழமை) - ரூ. 17.10 கோடி
3-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) - ரூ. 21.25 கோடி
4-ம் நாள் (திங்கள் கிழமை) - ரூ. 12 கோடி
5-ம் நாள் (செவ்வாய்க் கிழமை) - ரூ. 20 கோடி
6-ம் நாள் (புதன் கிழமை) - ரூ. 6.50 கோடி
7-ம் நாள் (வியாழக்கிழமை) - ரூ. 6.10 கோடி
8-ம் நாள் (வெள்ளிக்கிழமை) - ரூ. 4 கோடி