தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்றுள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள 100-வது படம் இது. ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது:
ஒரு புதிய தலைமுறையை இங்குக் காண்கிறேன். அவர்களுடைய விருப்பத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும். பாடலில் வருவதுபோல ஆளப்போறான் தமிழன் என்பதுதான் எங்களுடைய விருப்பமும்கூட. அதை நீங்கள் உண்மையாக்கவேண்டும். ஒவ்வொரு தொழிலும். மருத்துவம், கல்வி, மாநிலத்தின் தலைவர் என. பண்பிலும் கூட. பெண்களிடம் பண்புடன் நடந்துகொள்ளவேண்டும். அதற்கு நீங்கள்தான் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றார்.