தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 102-வது படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
தற்போது பாலகிருஷ்ணா நடித்து வந்த ‘பைசா வசூல்’ திரைப்படம் செப்டம்பர் 1, 2017 அன்று திரைக்கு வரவிருப்பதால், தனது 102-வது படத்திற்கான வேலைகளில் பாலகிருஷ்ணா இறங்கியுள்ளார். தமிழ் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ‘ஸ்ரீ ராமராஜியம்’ மற்றும் ‘சிம்ஹா’ ஆகிய இரு படங்களும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சி.கல்யாண் தயாரிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ஃபில்ம் சிட்டியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்படவுள்ள அரங்கில் நிகழ உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் ‘ஜெய சிம்ஹா’ எனப் பெயர் சூட்டப் படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.