பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் வசூலிலும் அசத்தி வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தைப் பாராட்டி இயக்குநர் ராஜமெளலி ட்வீட்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறியதாவது:
அர்ஜுன் ரெட்டி படத்தைப் பார்த்தேன். காதல் கதைகள் எனக்கானவை இல்லை என்றாலும் படத்தை மிகவும் பாராட்டுகிறேன். விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவர் மட்டுமல்ல, ஷாலினி, அவர் நண்பர்கள் என அனைவரும் அபாரமாகவும் இயல்பாகவும் நடித்துள்ளார்கள். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் நன்றாக உள்ளன. வசனங்களும் அருமை. இயக்குநர் சந்தீப் படக்குழுவினரை தொழில்முறையில் சிறப்பாகக் கையாண்டுள்ளார். மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.