என் மீதிச் சம்பளம் ரூ. 3.5 கோடி எங்கே?: தயாரிப்பாளர் குற்றச்சாட்டுகளுக்கு சிம்பு பதில்!

எனக்கு வரவேண்டிய சம்பளத்தை விட்டுக்கொடுத்ததால்தான் அஅஅ படம் வெளியானது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்பதில் நியாயம் இல்லை...
என் மீதிச் சம்பளம் ரூ. 3.5 கோடி எங்கே?: தயாரிப்பாளர் குற்றச்சாட்டுகளுக்கு சிம்பு பதில்!

அஅஅ படத் தயாரிப்பாளர் எனக்கு இன்னமும் ரூ. 3.5 கோடி சம்பளப் பாக்கி வைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன் என தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சிம்பு பதில் அளித்துள்ளார்.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன்.

இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். 

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம், சிம்பு அவர்களால் என்னைப் படுபாதாளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எந்தக் கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்கத் தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தந்துவிட்டார். படப்பிடிப்பு ஏற்பாடு செய்யும்போது ஒவ்வொரு லொகேஷனையும் மாற்றினார் சிம்பு. அவர் சொன்ன கால்ஷீட் நேரத்தில் ஒருநாளும் வந்தது இல்லை. வரவும் மாட்டார். பலவழிகளில் தொல்லை கொடுத்தார். பலநாள்கள் அவரால் படப்பிடிப்பு நின்றது. சிம்புவினால் ஏற்பட்ட இடைஞ்சல், தொல்லைகள் ஆகியவற்றால் படம் குளறுபடியாக வந்தது. எனக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் மீண்டும் ஏற்படாமல் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு அஅஅ படத் தயாரிப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சிம்பு ஒரு பேட்டியில் கூறியதாவது: 

மைக்கேல் ராயப்பன் எனக்கு ரூ. 3.5 கோடி சம்பளப் பாக்கி வைத்துள்ளார். பட வெளியீட்டுக்கு முன்பு அதை விட்டுக்கொடுத்தேன். இதுகுறித்து நடிகர் சங்கத்திலும் நான் புகார் அளித்துள்ளேன். எனக்கு வரவேண்டிய ரூ. 3.5 கோடியை நடிகர் சங்கம் வாங்கித் தரவேண்டும். இதுகுறித்து அஅஅ பட வெளியீட்டுக்கு முன்பே புகார் கொடுத்தேன். தயாரிப்பாளர் சங்கம் எனக்கு விதித்துள்ள ரெட் கார்ட் தடையை எப்படிக் கையாளவேண்டும் என்பது எனக்குத் தெரியும். 

ஒரு படத்துக்கு முன்பணம் வாங்கிக்கொண்டு பிரச்னை உருவானால் அதுகுறித்து நான் பதில் அளிக்கலாம். ஆனால் ஏற்கெனவே வெளியான ஒரு படம் குறித்து நான் ஏன் பதில் அளிக்கவேண்டும்? எனக்கு வரவேண்டிய சம்பளத்தை விட்டுக்கொடுத்ததால்தான் அஅஅ படம் வெளியானது. இப்போது இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்பதில் நியாயம் இல்லை. அதிகாரபூர்வமாக எந்தக் கடிதமும் எனக்கு அனுப்பப்படவில்லை என்று கூறியுள்ளார்.  

சிம்பு அடுத்ததாக மணி ரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com