சென்னை: விரைவில் நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போகும் நடிகர் விஷாலுக்காகப் பிரச்சாரம் செய்வேன் என்று திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவினால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கவுள்ளது. திமுக, அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக ஆர்.கே.நகரில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்தார். இதற்காக திங்கள்கிழமை அவர் மனுதாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் விஷாலின் இந்த முடிவு குறித்து திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கடிதங்களின் புகைப்படங்களை தொடர்ச்சியாகப் பதிவிட்டு கூறியிருப்பதாவது:
''ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷால் சாருக்கு எனது வாழ்த்துகள். பணம் வாங்காமல் ஓட்டு போடும் மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் உணர்த்தும்.விஷால் சாருக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக இந்த கடிதத்தைப் பார்த்தால் குற்றம் மட்டுமே கண்டுபிடிக்கும் பரம்பரை சேர்ந்தவன் 'நீ பிரச்சாரம் செய்தால் எவன்டா ஓட்டு போடுவான்னு கேப்பானுங்க'. எனக்கு எல்லா ஊர்களிலும் தம்பிமார்கள் இருக்கிறார்கள். மாற்றம் வராதா என்ற ஏக்கத்துடன் அந்த தம்பிகள் எனக்காக விஷால் சாருக்கு ஓட்டு போடுவாங்க." என்று ஒப்புறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மற்றொன்றில் அவர் கூறியுள்ளதாவது:
"தமிழ்' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவன் எவன் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவன். அரசியல் மாற்றம் வேணும்னு நினைக்கிறவன் விஷால் சாருக்கு ஓட்டு போடுங்க. மக்களுக்காக உண்மையாக உழைப்பார். இது என் கருத்து''
இவ்வாறு சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரித்துள்ளார்.