ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை சனிக்கிழமை அவர் வெளியிட்டார்.
இதையடுத்து இயக்குநர் சேரன் ட்விட்டரில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நேற்றுதான் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தேன். இன்று பேசத்தூண்டுகிறது. விசால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அனுமதிப்பது சரியா?
முதல் களமிறங்கும்போதே பொய்முகத்தோடு நோக்கமேயின்றி யாருடைய தூண்டுதலாலோ நிற்பதிலிருந்து வியாபாரக்குதிரை ஆகிவிட்டார் விசால்.
நடிகர் சங்கத்தில் ஜெயித்தவுடன் முதலில் கலைஞர் அய்யாவை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய விசால் நாளை எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரை வணங்கி மனுதாக்கல். ஏன்?
விசாலின் இந்தமுடிவால் நடுத்தெருவில் நிற்கப்போவது தயாரிப்பாளர்கள். இனிவரும் எந்த அரசிடமிருந்தும் எதுவும் கிடைக்கப்போவதில்லை. மொத்தமாக தலையில் துண்டு.
தயாரிப்பாளர் நலன் கருதி விசால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்பதே நல்லது. இல்லையெனில் நிறைய "அசோக்குமார்களை" சங்கம் சந்திக்கும்.
இதைக் கருத்தில் எடுக்காமல் நாளை அவர் மனுதாக்கல் செய்தால் நாளை மறுநாள் முதல் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம். தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் வரை.
என்னிடமுள்ள 75 கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு போகட்டும். தேர்தலில் நிற்பதைத் தடுக்கமாட்டோம் ஆனால் எங்கள் பிணத்தின்மீது நடக்க அனுமதிக்க மாட்டோம்.
பத்திரிக்கை ஊடகநண்பர்களுக்கு வேண்டுகோள். விசாலின் சுயரூபம் வெளியில் வர உதவுங்கள். அவர் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் சாதித்ததென்ன?
விசால் தேர்தலில் நிற்பதை பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. அது அவர் வியாபாரம். முடிவை மக்கள் சொல்லட்டும். என் கவலை என் தொழில் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
செல்லமே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமான விஷால், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார்.