சந்தானம் படத்துக்கு இசையமைத்துள்ள சிம்பு, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன். இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தால், வேறு எந்தப் படத்திலும் நடிக்கமுடியாதபடி சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இணையத்தளம் ஒன்றுக்கு சிம்பு அளித்த பேட்டியில் கூறியதாவது: மணி ரத்னம் சார் படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானதிலிருந்து அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகச் செய்திகள் வெளிவருகின்றன. நான் அப்படத்தில் நடிக்கக்கூடாது எனப் பலர் முயற்சி செய்கிறார்களா? ஜனவரி 20 முதல் மணி ரத்னம் சார் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்.
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளேன். நாளை இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தனுஷ் பாடல்களை வெளியிடுகிறார். என்மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை நான் பதில் அளிக்கவில்லை. ஆனால் இசை வெளியீட்டு விழாவில் என் மனத்தில் உள்ளதை ரசிகர்களுக்குத் தெரிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.