ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்யப்போவதில்லை என நடிகர் கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இ. மதுசூதனன் (அதிமுக), என். மருதுகணேஷ் (திமுக), டிடிவி தினகரன் (சுயேச்சை) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளார்கள்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரசாரம் செய்யவுள்ளதாக செய்தி ஒன்று வெளியானது. இதற்கு உடனடியாக கவுண்டமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக ஒரு நாளிதழில் வந்துள்ள செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். எந்தக் கட்சியையும் ஆதரித்தும் பிரசாரம் செய்யவில்லை என்று தனது மறுப்பை வெளியிட்டுள்ளார்.