கன்னியாகுமரியைத் தாக்கிய ஒக்கி புயல் ஓய்ந்து பல நாள்களாகியும் மீனவக் குடும்பங்களின் சோகம் ஓய்ந்தபாடில்லை. கரை திரும்பாத மீனவர்களை எதிர்பார்த்து அவர்களுடைய குடும்பங்கள் கண்ணீரோடு கடற்கரையில் காத்திருக்கின்றன.
இந்நிலையில் நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ், ஆரி ஆகியோர் கன்னியாகுமரிக்குச் சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள். இதுகுறித்து ஜி.வி. பிரகாஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஊரெங்கும் ஒரே அழுகைச் சத்தம்.
எங்களுக்கு நிவாரணம் எல்லாம் வேண்டாம். எங்கள் உறவினர்களைத் திரும்ப அழைத்தால் போதும் என்கிற புலம்பல் ஒருபுறம்... ஐயா... கடலில் உடல்கள் மிதக்கிறதா சொல்றாங்க. அந்த உடல்களையாவது மீட்டுக்கொடுங்கள் என்று கண்ணீர் மறுபுறம். அவர்களிடம் பதில் சொல்லமுடியாத ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.
எங்கள் கண்ணீர் மற்றவர்களைக் கரைக்காதா, எங்கள் உறவுகள் கரை சேராதா என்று பெண்கள் கதறி அழுவது என்னையும் கண்ணீர் சிந்த வைத்தது. அரசாங்கம் அதன் வழியில் உதவட்டும். நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வோம். கரம் கோப்போம். கண்ணீர் துடைப்போம் என்று எழுதியுள்ளார்.