திருமதி பாகுபலி யார்? 

திருமணம் சாஹோ முடிந்த பிறகா அல்லது அதற்கு முன்பேவா என்பதை அவரே குறிப்பிட்டவாறு தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருமதி பாகுபலி யார்? 

அரசியல்வாதியும் பிரபல நடிகருமான கிருஷ்ணம் ராஜூ பல மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் திடீரென ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரபாஸ் திருமணம் குறித்து ஒரு சந்தோசமான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாகுபலி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த டோலிவுட் ரெபெல் ஸ்டார், மிஸ்டர் பெர்ஃபெக்ட், அக்கடபூமியின் டார்லிங் என பல்வேறு பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரரான பிரபாஸுக்கு வயது 38. இவரது திருமணத்துக்காக இவரது மொத்தக் குடும்பமும் சில ஆண்டுகளாகவே மணப்பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது. பாகுபலி - 2 திரைப்படம் வெளியான சமீபத்தில் ஆந்திராவின் பிரபல சிமெண்ட் ஆலைத் தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை இவர் மணக்கவிருப்பதாக வதந்திகள் கூட பரவின. ஆனால் அது உண்மையில்லை என பிரபாஸின் பெரிய தந்தையாரான கிருஷ்ணம் ராஜூ தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே பிரபாஸ் பங்கேற்கும் நேர்காணல்கள் தோறும் அவரிடம் அவரது திருமணம் எப்போது? எனும் கேள்வி தவிர்க்கவே முடியாத கேள்வியாக தொடர்ந்து கொண்டே இருந்தது.

தனது திருமணம் குறித்த அத்தனை கேள்விகளுக்கும், பதில் தற்போது தனக்கே தெரியாத காரணத்தால் உடனடியாக எதுவும் சொல்வதற்கில்லை... ஆனால், தனக்கு வரப்போகும் மனைவி செயற்கைத் தனங்கள் அற்ற நல்ல ஆத்மாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இருப்பதாக பிரபாஸ் தெரிவித்திருந்தார். அன்பான மனைவியாக இருந்தால் போதும் அழகைப் பற்றி தான் பெரிதாக அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் பிரபாஸ், நடிகை மஞ்சு லட்சுமிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு; அப்படி ஒரு பெண் அமைந்ததும், திடீரென ஒருநாள் தொலைக்காட்சிகளில் மிஸஸ்.பாகுபலி இவர் தான் என பிரேக்கிங் நியூஸ் வரலாம். அப்போது தெரிந்து கொள்ளுங்கள் என் வருங்கால மனைவி யாரென்று? என்று நகைச்சுவையாக பதில் அளித்திருந்தார் பிரபாஸ்.

இப்போது அதற்கான நேரம் வந்து விட்டது என்கிறார் பிரபாஸின் பெரியப்பாவான நடிகர் கிருஷ்ணம் ராஜூ. பிரபாஸுக்குப் பொருத்தமாக சில வரன்களைத் தாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருப்பதாகவும். அதில் தனக்குப் பிடித்த மணமகள் யாரென்பதை பிரபாஸ் தேர்வு செய்ய வேண்டிய வேலை மட்டுமே பாக்கி என்றும். அவர் தேர்வு செய்து விட்டாரென்றால் உடனே திருமணத்தை நடத்தி விடும் முடிவில் குடும்பத்தார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் சாஹோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் சாஹோ முடிந்த பிறகா அல்லது அதற்கு முன்பேவா என்பதை அவரே குறிப்பிட்டவாறு தொலைக்காட்சி பிரேக்கிங் நியூஸ் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com