கொள்ளையரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!

குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன்...
கொள்ளையரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு நடிகர் கார்த்தி அஞ்சலி!

சமீபத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காவல்துறை அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார். அக்கதாபாத்திரம் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் வாழ்க்கையையொட்டி உள்ளதால் பெரியபாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் கார்த்தி.

சென்னை கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 16}ஆம் தேதி நடந்த நகைக் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளைப் பிடிப்பதற்காக, கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர், மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், தலைமை காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் முதல்நிலைக் காவலர் சுதர்சன் ஆகியோர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்துள்ளார். மற்ற காவலர்கள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தமிழக காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியபாண்டியனின் மறைவுக்கு, தமிழக முதல்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்த பெரியபாண்டியனின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதியை தமிழக அரசு அறிவித்ததோடு, அவருடைய இரண்டு மகன்களின் படிப்புச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த பெரியபாண்டியனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விமான நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவருடைய உடலுக்கு முதலில் போலீஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின்னர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செலவம், அமைச்சர்கள் பாண்டியராஜன், ராஜலட்சுமி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  பின்னர் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

ஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் அவரது சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரியபாண்டியன் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு ஆய்வாளர் பெரியபாண்டியன் சொந்த ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதன்பின் பெரியபாண்டியனின் உடல் முழு அரசுமரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி. வீட்டில் இருந்த பெரியபாண்டியனின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com