சென்னை: ஆர்.கே. நகரில் தேர்தல் காரணமாக பணம் தாராளமாக புழங்குவதை கிண்டல் செய்யும் விதமாக, ஆர்.கே. நகரில் இருந்திருக்கலாம் என்று பிரபல திரைப்பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முதல் ஸ்பூப் வகைப்படம் 'தமிழ்ப் படம்'. இத்திரைப்படத்தினை இயக்கியவர் சி.எஸ்.அமுதன். சமூகவலைத்தளமான டிவிட்டரில் தீவிரமாக இயங்கக்கூடியவர். அவ்வப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் வகையில் ஏதாவது கருத்துக்களை தெரிவித்து வருவார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் மக்களுக்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு பணப் பட்டுவாடா செய்துவருவதாக கூறப்படுகிறது. பணத்துடன் சில பரிசுப் பொருட்களும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த தொகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் சி.எஸ்.அமுதன் தனது டிவிட்டர் பக்கத்தில், 'புதிய போஸ் சவுண்ட் டச்சை வாங்க விரும்புகிறேன். ஆர்.கே. நகரில் வசித்திருக்கலாம் என்று விரும்புகிறேன்' என்று கிண்டல் செய்துள்ளார்.
ஆர்.கே. நகரில் தேர்தல் காரணமாக பணம் தாராளமாக புழங்குவதை நக்கல் செய்யும் வகையில் அவரது ட்வீட் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.